கனடாவில் கடும் புயலில் சிக்கித் தப்பிய காட்டுக் குதிரைகள்
கனடாவில் கடும் புயலில் சிக்கிய காட்டு குதிரைகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.
அட்லாண்டிக் கனடா பகுதியை பியோனா புயல் தீவிரமாக தாக்கியிருந்தது.
இந்த புயல் காற்று தாக்கத்தில் நோவா ஸ்கோட்டியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு உள்ளிட்ட பல பகுதிகள் மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தன.
புயல் கடந்த சேபல் தீவுப் பகுதியில் இந்த காட்டுக் குதிரைகள் வாழ்ந்து வந்தன. கடுமையான புயல் காற்று காரணமாக இந்த குதிரைகள் பாதிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், புயல் அந்தப் பகுதியை கடந்ததும் வழமை போன்று காட்டுக் குதிரைகள் அந்தப் பகுதியில் சுற்றித் திரிவதனை மக்கள் அவதானித்துள்ளனர்.
கடந்த 18ம் நூற்றாண்டு முதல் இந்த காட்டுக் குதிரைகள் இந்த தீவில் வாழ்கின்றன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள் இவ்வாறு இந்த தீவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குதிரைகள் கடும் காற்றுக்கு பழக்கப்பட்டவை எனவும் இவ்வாறான புயல் காற்று வீசும் போது அதற்கு ஈடு கொடுக்கும் ஆற்றல் கொண்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.