60 புதிய இடங்களில் பற்றியெரியும் காட்டுத்தீ: தகிக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 60 இடங்களில் காட்டுத்தீ மூண்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மாகாணம் முழுவதும் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றியெரிவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 25 இடங்களில் பற்றியெரியும் காட்டுத்தீயால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட தீ நிலையானதாகவே உள்ளது, ஆனால் வெப்பமான, வறண்ட நிலைமைகள் தொடர்ந்து நீடிக்கின்றன என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் வெப்ப அலை தொடர்பில் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 100 மைல், கரிபூ, ஃப்ரேசர் கனியன் மற்றும் தெற்கு தாம்சன் பகுதிகள் வெப்ப அலை தாக்கலாம் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெப்பநிலை 38 C ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வெர்னான் அருகிலுள்ள கோல்ட்ஸ்ட்ரீம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் வெளியேற்ற எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டதால் நிம்மதியடைந்துள்ளனர்.