ஐரோப்பா முழுவதும்... ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் வெளியேற்றம்: வியாபிக்கும் அச்சுறுத்தல்
50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை நெருங்கும் நிலையில் ஐரோப்பா முழுவதும் ஆபத்தான காட்டுத் தீ பரவுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு அருகில் பதிவாகி வருவதால், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மட்டுமின்றி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான வீடுகளிள் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், காட்டுத்தீ காரணமாக போர்த்துகலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, காட்டுத்தீ காரணமாக போர்த்துகல் திங்களன்று தேசிய எச்சரிக்கை நிலையை அறிவித்தது. மட்டுமின்றி, இந்த காட்டுத்தீயானது கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ளவையில் மிக மோசமானதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து தீயை கட்டுப்படுத்தும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர். லீரியாவில் இதுவரை 3,000 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று பலமாக வீசுவதால், ஆபத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இதனிடையே, பிரான்சில் Gironde பகுதியில் இதுவரை 2,700 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து சேதமாகியுள்ளது.
Landiras நகரில் இருந்து 500 குடியிருப்பாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள முகாம்களில் இருந்து சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஸ்பெயினின் மேற்குப் பகுதியான எக்ஸ்ட்ரீமதுராவில், காஸ்டில் மற்றும் லியோன் பகுதியில் உள்ள சலமன்கா மாகாணத்தில் ஏற்பட்ட தீயால், 4,000 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து நாசமானது.
இதனிடையே, காலநிலை மாற்றம் மிகவும் வறண்ட மற்றும் வெப்பமான கோடையை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.