2 ஆண்டுகள் கோமாவிலிருந்து மீண்டு, தாக்கியவரை அம்பலப்படுத்திய பெண்
மேற்கு வெர்ஜினியா பிராந்தியத்தில் பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகள் கோமாவிலிருந்து மீண்டு, தன்னை தாக்கியவர் யார் என்பதனை அடையாளம் காட்டியுள்ளார்.
தனது சகோதரரே தம்மை தாக்கியதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். வாண்டா பால்மர் என்ற 51 வயதான பெண், மேற்கு வெர்ஜினியாவின் கொட்டேஜ்வெலியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து தமது சகோதரர் தம்மை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பால்மர் உயிரிழந்து விட்டதா கருதியதாகவும், பின்னர் உயிர் இருப்பதனை கண்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோடாரியினால் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் அப்போது சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித சாட்சியங்களையும் பொலிஸாரினால் திரட்டிக்கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் பால்மர் கோமாவிலிருந்து மீண்டு விட்டதாகவும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றார் எனவும் பால்மரை பராமரித்து வந்த நிலைய நிர்வாகம், பொலிஸாருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
பால்மரிடம் நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் 55 வயதான அவரது சகோதரர் டேனியல் பால்மரை கைது செய்துள்ளனர்.
முழுமையான அளவில் விசாரணைகளில் சாட்சியமளிக்கும் உடல் நிலை பால்மருக்கு கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.