கனடாவின் கேப் பிரெட்டனில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிப் பெண் பலி!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாநில முதலமைச்சர் டிம் ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிச்மண்ட் கவுண்டி பொலிஸாரின் தகவல்படி, கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் சனிக்கிழமை காலை காணாமல் போயிருந்தார்.
வெள்ள நீரில் மூழ்கிய பாலத்திற்கு அப்பால் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் அப்பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
[WU8TR ]
இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய காரணங்கள் எதுவும் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாரயிறுதியில் கேப் பிரெட்டனின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் டிம் ஹூஸ்டன், சீரற்ற வானிலை தொடர்வதால் பொதுமக்கள் வீதிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.