8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட 60 வயது பெண்மணி: பகீர் பின்னணி
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு யார்க்கில் 60 வயது பெண் ஒருவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிசாருக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் 5785 யோங் ஸ்ட்ரீட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.
அந்த குடியிருப்பில் 8வது மாடியில் குடியிருக்கும் பெண்மணி நலமாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து பிஞ்ச் அவென்யூ அருகாமையில் அமைந்துள்ள அந்த குடியிருப்புக்கு சிறப்பு விசாரணை குழுவினர் சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த பெண்மணியை சந்தித்த விசாரணை அதிகாரிகள், அவரிடம் ஆவணங்கள் கோரிய நிலையில், குறித்த பெண்மணி உள்ளே சென்று ஆவணங்களுடன் திரும்புவதாக கூறியுள்ளார்.
குடியிருப்புக்கு உள்ளே சென்ற பெண்மணி திரும்பி வருவார் என பொலிசார் வெளியே காத்திருந்துள்ளனர். திடீரென்று அந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
பதறிப்போன அதிகாரிகள் அவசர அவசரமாக கீழே சென்று பார்க்கையில், அதிகாரிகளுடன் பேசிய பெண்மணியே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதியானது.
அவர் தற்கொலை செய்து கொண்டதன் காரணம், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் எதையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
அவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.