விருந்தில் பணத்தை விசிறிய பெண்ணுக்கு சிறை
நைஜீரியாவில் விருந்தில் நைஜீரியாவின் பணத்தை காற்றில் தூவிய ஒரு பிரபலமான டிக்டாக் பயனாளருக்கு 6 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
கனோ நகரத்தை சேர்ந்த முர்ஜா குன்யா என்ற டிக்டாக் பயனாளி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
33 அமெரிக்க டாலர் அபராதம்
இதன்போது குன்யாவுக்கு 33 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு செய்தி பரப்பும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு வழங்கினார்.
26 வயதான குன்யா, சமூக ஊடகங்களில் தனது காணொளிகள் முஸ்லிம் மக்களின் மரபுகளை மீறியவை என கருதி அதிகாரிகளால் பலமுறை கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகின்றது.
இந்த வீடியோக்கள் காரணமாக, ஷரியா போலீசான "ஹிஸ்பா" என்ற அமைப்பினரால் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
அதேவேளை நைஜீரியாவின் திருமணங்கள் மற்றும் விருந்துகளில், பணத்தை தூவுவது வழக்கமான ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. எனினும் பணத்தை அவமதிப்பதாக கருதி இந்த செயல் சட்டப்படி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.