வருங்கால கணவரை கொன்று சடலத்துடன் வாழ்ந்த பெண்
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது வருங்கால கணவனைக் கொன்று, அந்த மரணத்தை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்துடன் அவர் இரண்டு மாத காலம் வாழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த 46 வயது தபிதா ஜெலிடா வூட் என்பவரே தமது 82 வயது வருங்கால கணவர் லெராய் பிராங்க்ளின் என்பவரது கொலையை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
2022 ஜூன் மாதம் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் லெராய் பிராங்க்ளின் என்பவரின் குடியிருப்புக்கு விசாரணைக்காக சென்ற நிலையில், சடலம் ஒன்றை மீட்டுள்ளார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், லெராய் பிராங்க்ளின் ஏப்ரல் மாதம் இறந்ததாகவும், ஆனால் வெளியே தெரிவிக்க அஞ்சியதாகவும் வூட் தெரிவித்துள்ளார்.
ஆனால், உடற்கூராய்வில் லெராய் பிராங்க்ளின் கொல்லப்பட்டுள்ளது உறுதியானதை அடுத்து வூட் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டாலும், அவருக்கான தண்டனை தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது.