ரஷ்யா அச்சத்தால் கணவனின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய பெண்; வேதனையை ஏற்படுத்திய சம்பவம்
உக்ரைன் - ரஷ்ய மோதலால், ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், பெண் ஒருவர், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
பெண்ணின் கணவரான வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு டான்பாஸ் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது முதல் கல்லறை அவர்களின் சொந்த ஊரான ஸ்லோவியான்ஸ்கில் (Slovyansk) இருந்தது.

பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள கீவ்
எனினும் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால், அந்தப் பகுதி தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அதனால், நடாலியா எனும் பெண் தனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து, பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குக் கொண்டு வந்துள்ளார்.
நாங்கள் அவரை ஸ்லோவியான்ஸ்கில் அடக்கம் செய்தபோது, சில பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன. போர் விரைவில் முடிந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற மறு அடக்கச் சடங்கிற்குப் பின்னர் நடாலியா விளக்குகிறார். ஆனால் போர்க்களம் இப்போது எங்களை நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
வித்தாலியின் கல்லறை ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்றுவிடுமோ என நான் பயந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். வித்தாலி ஒரு பீங்கான் கலைஞர். 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது, தனது நாட்டைப் பாதுகாக்க அவராகவே முன்வந்து ராணுவத்தில் சேர்ந்தார்.
அவருக்கு விருப்பமில்லைதான், ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் ஒரு தேசப்பக்தர், என நடாலியா கண்ணீருடன் கூறுகிறார்.
தான் கருவுற்றிருந்த போதே கணவர் வித்தாலி கொல்லப்பட்டார். தனது மகளைப் பார்க்கும் வாய்ப்பு வித்தாலிக்குக் கிடைக்கவே இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
வித்தாலி பிறந்து, போராடி மடிந்த மண்ணிலிருந்து அவரது உடலை மாற்றுவது என்பது மிகவும் வலிமிகுந்த முடிவாக இருந்தது. “உணர்ச்சிப்பூர்வமாக இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இது சரியான முடிவு, அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தால், அது இன்னும் அதிக வேதனையைத் தந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயன்று வரும் வேளையில், உக்ரைன் மக்கள் கற்பனை செய்ய முடியாத பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.