மின் இணைப்பில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை... பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்!
அம்பாந்தோட்டை பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி தாயொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (22-10-2024) இடம்பெற்றுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த 8 வயது குழந்தை, உயிரிழந்த தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்தத் தாயார் உடனடியாகத் தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாயாரின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகின்றார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.