இளம் பெண் சடலமாக மீட்பு! அதே நாளில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பெண்ணின் ஆசிரியர்
இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 19 வயது காவ்யா சுபாஷினி என்ற இளம்பெண் கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சடலம் மீட்பு
காவ்யா அன்று மாலை 5:30 மணியளவில் இங்கிரிய பல்பொருள் அங்காடியில் பணி முடித்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் சடலம், களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் நேற்று(07) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் விசாரணையில், காவ்யாவுடன் தொடர்பில் இருந்த ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை
அவர், மார்ச் 2 ஆம் திகதி காவ்யா தனக்கு இரண்டு முறை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், காவ்யாவின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட அதே நாளில் (மார்ச் 7), அந்த ஆசிரியரும் ஹல்வத்துரவில் உள்ள வீடொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.