இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 15 பேர் பணி நீக்கம்!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 மின்சார சபை ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்சார சபையின் காசாளர் கருமபீடத்தை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 மின்சார சபை ஊழியர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம்
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜனவரி 03 ஆம் திகதி முதல் மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது மின்சார சபையின் காசாளர் கருமபீடத்தில் அன்று கடமையில் இருந்த ஊழியர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தவந்த வடிக்கையாளர்களை கட்டணத்தை செலுத்தவிடாது கருமபீடங்களை மூடி இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.