சர்வதேச மாணவர்களிடம் மோசடி: கனடாவில் இருவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு!
கனடாவிற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை ஏமாற்றி, சுமார் 126,000 கனடிய டாலர்கள் மோசடி செய்த ஓண்டாரியோவைச் சேர்ந்த இருவர் மீது கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் பல குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2025 பெப்ரவரி மாதம், சார்னியா பகுதியில் உள்ள லேம்ப்டன் கல்லூரி வழங்கிய ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் மூலம் இந்த மாபெரும் கல்வி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சர்வதேச மாணவர்களிடம் கல்லூரிப் படிப்பிற்கான கட்டணத்தை தாங்களே செலுத்திவிடுவதாகக் கூறி பெருந்தொகையைப் பெற்றுள்ளனர்.

பணம் கொடுத்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்ததற்கான போலி சேர்க்கை ஆவணங்களையும் வழங்கியுள்ளனர்.
ஆனால், உண்மையில் எந்தவொரு மாணவரும் எந்தவொரு படிப்பிலும் சேர்க்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து, அவற்றிலிருந்து டிஜிட்டல் தடய ஆதாரங்களைத் திரட்டினர்.
விசாரணையின் முடிவில், ஓண்டாரியோவின் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஹர்திக் தவே மற்றும் லண்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயினிஷ்குமார் படேல் ஆகிய இருவர் மீதும் ஜூன் 2ஆம் திகதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5,000-க்கு அதிகமான தொகையை ஏமாற்றியதற்கான 4 மோசடி வழக்குகள், போலி ஆவணங்களைத் தயாரித்து புழக்கத்தில் விட்டதற்கான 4 வழக்குகள், குடிவரவு சட்டத்தின் கீழ் தவறான வழிகாட்டுதலை வழங்கியதற்கான 4 வழக்குகள் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஹர்திக் தவே வரும் ஜூலை 10ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மற்றொரு குற்றவாளியான ஜெயினிஷ்குமார் படேல், காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கனடாவை விட்டு வெளியேறி வெளிநாட்டிற்குத் தப்பியோடியதாக நம்பப்படுகிறது. அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.