பாரிய போதைப் பொருள் வலையமைப்பினை முறியடித்த கனடிய பொலிஸார்: 6 பேர் கைது!
பனாமா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ள கனடா காவல்துறையினர், சுமார் 20 மில்லியன் டொலர் சந்தை மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளையும், 2.5 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மே 2026-இல், பனாமாவிலிருந்து வந்த ஒரு சரக்கு கப்பலில் பெருமளவிலான கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கனடா எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, “புராஜெக்ட் கோல்டன் ஃபிராக்” என்ற பெயரில் ஒரு விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கடத்தல் விவகாரம் ஒன்றாரியோவின் கிச்சனர் நகரத்தைச் சேர்ந்த ஒரு சந்தேக நபரனுடன் தொடர்புடையது என்பதை அறிந்த எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம், இது குறித்து யார்க் பிராந்திய காவல்துறைக்கு தகவல் வழங்கி விசாரணையை முடுக்கிவிட்டது.
காவல்துறையினர் ஜூன் மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் நடத்திய அதிரடி சோதனைகளின் மூலம் இந்த போதைப்பொருள் கும்பலைக் கைது செய்துள்ளனர்.
கிச்சனர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் சேமிப்புக் கிடங்கில் சோதனை நடத்திய காவல்துறையினர், மூன்று பேரைக் கைது செய்ததுடன், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட 2.5 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு வணிக நிறுவனம், குடியிருப்பு மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டு, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையில் பல நூறு கிலோகிராம் கொகைன் போதைப்பொருள் மற்றும் கூடுதல் பணம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக இந்த சோதனைகளின் போது, 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 260 கிலோகிராம் கொகைன் போதைப்பொருள் மற்றும் மில்லியன் கணக்கான டொலர் ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் கிச்சனர் நகரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத இறக்குமதி, சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் சட்டவிரோத பணப் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.