கனடாவில் கப்பம் கோரல்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கப்பம் கோரல் குறித்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு சற்றுமுன் க்ரெசென்ட் பீச் (Crescent Beach) பகுதியில் கப்பம் கோரல் எதிர்கொள்ளும் சிறப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, க்ரெசென்ட் ரோடு மற்றும் 132 ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததுடன், சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு வாகனத்தை காவல்துறை கண்டறிந்தபோது, அதில் இருந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி கால்நடையாக தப்பியோடியுள்ளனர்.
பின்னர் அவர்கள் ஒரு ரைடு-ஷேர் வாகனத்தில் ஏற முயன்ற நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் வீட்டிற்கு பெரும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், துப்பாக்கிச் சூட்டினால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கப்பம் கோரலுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.