கனடாவில் பனிச்சரிவில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
சுவிஸ் பிரஜைகள் கனடாவின் வடமேற்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த மூவர் சுவிட்சர்லாந்து நாட்டினர்கள் என அந்த நாட்டின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாங்கூவரில் உள்ள சுவிட்சர்லாந்து துணைத்தூதரகத்தின் பிரதிநிதி சில்வானா ரெங்க்லி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிஸ் வெளிவிவகாரத் துறை உதவி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
தனியுரிமை காரணங்களால் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவு, டெரஸ் நகரின் வடப்பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் க்னாஸ் பகுதியில் ஏற்பட்டது. இதில் மூன்று ஸ்கியர்கள் பனிக்குள் புதையுண்டு உயிரிழந்தனர்.
அவர்களுடன் இருந்த வழிகாட்டி ஒருவர் காயமடைந்து வாங்கூவரில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
‘வைட் வில்டர்னஸ் ஹெலிஸ்கியிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த மைக்கேல் பிராக்கன்ஹோஃபர் தெரிவித்ததாவது, சம்பவத்திற்குப் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஸ்கியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பனியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஹெலிஸ்கியிங் நிறுவனம் அடுத்த அறிவிப்பு வரும் வரை தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும், “இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று விருந்தினர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்,” என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.