உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் ; ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீ விபத்து மற்றும் வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயர் தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனை இலக்காகக் கொண்டு ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகள் மற்றும் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.