பாகிஸ்தான் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்துக்குள்ளாகி 4 பேர் பலி
பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென இன்று வெடிவிபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 2 பேர் ஆண்கள். எனினும், அவர்களின் அடையாளம் தெரிய வரவில்லை.

உரிமம் எதுவும் இன்றி, சட்டவிரோத வகையில் வீடு ஒன்றில் இந்த பட்டாசு உற்பத்தி நடந்துள்ளது என லத்தீபாபாத் உதவி ஆணையாளர் கூறினார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டி ஒன்றும், தீ மற்றும் மீட்பு குழு ஒன்றும் அந்த பகுதிக்கு சென்றது. தீயை அணைக்கும் பணிகளும் நடந்தன. மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவம் பற்றி சிந்த் உள்துறை மந்திரி ஜியாவுல் ஹசன் லஞ்சார், கவனத்தில் கொண்டதுடன் விரிவான அறிக்கையை அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.