பனிச்சறுக்கு போட்டியில் விளையாடி கொண்டிருந்த 5 பேருக்கு நேர்ந்த கதி
சுவிட்சர்லாந்து பனிச்சறுக்கு போட்டியில் விளையாடி கொண்டிருந்த வெளிநாட்டினர் உள்பட 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது.
ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள்.
இதனால் அங்கு உயர்தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ரீம்ப்பிஷ்ஹார்ன் பனிசிகரத்தில் பனிசறுக்கு போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர்.
பனிசறுக்கு போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு சூரைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால் பனி குவியல்கள் ராட்சத பந்துபோல உருண்டோடி அங்கு பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த கொடூர சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த ராணுவ வீரர்கள் அங்கு வந்து பனிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.