கனேடிய நகரமொன்றில் ஆண் ஒருவரை குத்திக் கொலை செய்த 8 இளம்பெண்கள்
கனடாவின் ரொரன்றோவில், வீடற்ற நபர் ஒருவரை எட்டு இளம்பெண்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொரன்றோவில், யார்க் பல்கலை பகுதியில், 59 வயதுடைய வீடற்ற ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது படுகாயமடைந்த நிலையில் கிடந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், காயங்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த நபரைத் தாக்கியவர்களை பொலிசார் கைது செய்தார்கள். அதிர்ச்சியளிக்கும் விடயம் எனவென்றால் இந்த கொடூரச் செயலைச் செய்தவர்கள் எட்டு இளம்பெண்கள்!
13 முதல் 16 வயதுடைய எட்டு இளம்பெண்கள்தான் அந்த நபரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றுள்ளார்கள். அவர்களைக் கைது செய்த பொலிசார், அவர்களிடமிருந்து பல ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளார்கள்.
அந்த இளம்பெண்கள், அந்த நபரிடமிருந்த மதுபான போத்தல் ஒன்றைப் பறிக்க முயன்றபோது அவர்களுக்குள் சண்டை துவங்கியதாகவும், அது கொலையில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த பெண்கள் அனைவரும் கனடாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக சந்தித்து ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.