சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்
பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார்.
எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.