மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் பலி
மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த எரிவாயு கொள்கலன், நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வெடித்தது.
இந்தத் தீ விபத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 28 வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. விபத்தில் சிக்கிய 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் பலர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்துக் குறித்து மெக்சிகோ சிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா தெரிவிக்கையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.