இங்கிலாந்தில் நாயினால் ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்
இங்கிலாந்தில் ஒன்றரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை சொந்த வீட்டு நாய் கடித்து குதறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் லிவர்பூல் பூங்காவிலும் நடந்துள்ளது.
நேற்று மதியம் 1.25 ஒரு குழந்தையின் அலறல் சத்தம் பூங்காவில் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பதறி அடித்து சென்று அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஒன்றரை வயது ஆண் குழந்தையை நாய் கடித்துக் குதறி உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நாய் கடித்ததில் அந்தக் குழந்தையின் காலில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன்பின் அந்த நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றி அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின் குழந்தையை கடித்த நாயின் உரிமையாளரை விசாரிப்பதற்காக நாயினை பிடித்துசென்றுள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.