ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் சின்ன இராவணன் கோட்டை பகுதியில் பாறையில் மோதிய எம்.வி.யுரொசன் கப்பலின் கப்டன், பயணத்திற்கு தீர்மானிக்கப்பட்ட பாதையை மாற்றி பயணித்தமையின் காரணமாகவே பாறையில் மோதியுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பல் மோதியமையினால் கடல்படுகைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கணக்கிடுவதற்கு கடற்படுகை ஆய்வாளர்களின் விஞ்ஞானபூர்வ அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது எனவும் தெரதிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், லைபீரிய கொடியுடன் அபுதாபி துறைமுகத்தில் இருந்து திருகோணமலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை கொண்டு வந்த எம்.வி யுரோசன் கப்பல், சின்ன இராவணன் கோட்டை கடலில் நேற்று முன்தினம் பிற்பகல் பாறையுடன் மோதியது. அதனையடுத்து, குறித்த கப்பல் நேற்று பிற்பகல் அங்கிருந்து அகற்றப்பட்டது.
எவ்வாறாயினும் கப்பலில் இருந்து சீமெந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை எவையும் கசியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையின் சுழியோடிகளால் இன்று முற்பகல் கடலுக்கடியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் வழங்கும் தரவுகளுக்கு அமைய குறித்த கப்பலை துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.