பிரான்ஸ் ஜனாதிபதி கன்னத்தில் அறைந்தவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை(Emanuel Macron) பிரச்சாரத்தின் போது பளார் என்று கன்னத்தில் அறைந்த நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரான்சில் உள்ள தன்-ல் ஹெர்மிடகே என்ற நகரில் ஒரு ஹோட்டல் பள்ளிக்கு பிரச்சாரத்திற்காக சென்றிந்த போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஜனாதிபதி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி அறை வாங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதன் பிறகு இந்த சம்பவத்தில் மூல குற்றவாளியான டேமியன் ட்ரெல் என்பவரை காவல்துறையினர் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நபருக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதில் 14 மாதங்கள் சட்ட காவல் கண்காணிப்பிலும், நான்கு மாதங்கள் சிறையிலும் கழிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குற்றவாளியான டேமியன் ட்ரெல்-ஐ தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கண்காணிக்க வேண்டும், அப்போது அவர் குற்றங்கள் ஏதேனும் செய்தால் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த இரண்டு வருட காலத்தில் அவர் பயிற்சி வகுப்புகளில் இணைதல் அல்லது கட்டாயமாக வேலை செய்தல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை செய்துவரவேண்டும். அதேசமயம் மேலும் குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்காக உளவியல் சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.