ஆப்கானில் கண்ணிவெடி தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து சாலைகளில் கண்ணி வெடிகளை புதைத்து வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இந்த கண்ணி வெடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது அங்கு தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் கா நகரில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் கண்ணி வெடியை புதைத்து வைத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று இந்த கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.