குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரபல நாட்டுத் தலைவருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர்
வருடந்தோறும் இந்தியாவின் குடியரசு தினவிழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் 2023 ஆம் ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார்.
இந்நிலையில் 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி நேற்று உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் நிறைவடைந்த ஜி-20 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடியால் ஜோ பைடனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக கார்செட்டி கூறினார் மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது இருதரப்பு நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில், இந்தியா - அமெரிக்க நட்புறவு, உலகளாவிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை நிலைநாட்டுவதையும் உறுதி செய்தனர் என்றும் அவர் கூறினார்.