முதலீட்டாளர்களின் பணத்தில் சூதாட்டம்,: கனடா நபருக்கு அபராதம்!
கனடாவில் முதலீட்டாளர்களை ஏமாற்றி, அந்தப் பணத்தை ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அந்நாட்டின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு 3,00,000 டாலருக்கும் அதிக தொகையை அபராதமாகச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
வடக்கு வான்கூவரைச் சேர்ந்த டேவிட் லாரன்ஸ் பாசுரிக் என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர, அவர் 14 முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 2,00,000 டாலர்களையும், முறைகேடு மூலம் அவர் ஈட்டிய 107,176 டாலர்களையும் சேர்த்து திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பங்குச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாசுரிக், 'பாஸ்மேன் புரொமோஷன்ஸ்' என்ற பெயரில் விளம்பரம் மற்றும் விளம்பரப் பொருட்கள் தயாரிக்கும் வணிகம் செய்து வருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.
தனது வாடிக்கையாளர்களின் பிரத்யேக தயாரிப்பு ஆர்டர்களுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களின் பணம் பயன்படுத்தப்படும் என்றும், குறுகிய காலத்தில் அவர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கு வழங்கப்படும் என்றும் கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஜனவரி முதல் 2022 மே வரையிலான காலக்கட்டத்தில் 14 முதலீட்டாளர்களிடம் இருந்து மொத்தம் 200,460 டாலர்களைத் திரட்டியுள்ளார்.
ஆனால், அதில் வெறும் 39,280 டாலர்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள தொகையில் 146,000 டாலர்களை ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள், சொந்த பொருட்கள் வாங்குவது மற்றும் தனது நண்பர்களுக்குக் கொடுப்பது என ஆடம்பரமாகச் செலவழித்துள்ளார்.
பாசுரிக்கின் இந்தச் செயல் மாகாண பங்குச் சந்தை சட்டத்தின் கீழ் 'நிதி மோசடி' என்று கனேடிய ஒழுங்குமுறை ஆணையம் உறுதி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாசுரிக் பிரிட்டிஷ் கொலம்பிய முதலீட்டுச் சந்தையில் எந்தவொரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது அதிகாரியாகவோ செயல்பட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது சொந்த கணக்கைத் தவிர வேறு எங்கும் பங்குகளை வர்த்தகம் செய்யவோ, விளம்பரம் செய்யவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.