இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் பதிலடி ; ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்ற வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அரக்சி, "அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒன்று அது போர்நிறுத்தத்தைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது இஸ்ரேல் மூலமாகத் தொடரும் போரை ஆதரிக்க வேண்டும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் அமெரிக்காவால் செய்ய முடியாது" என எச்சரித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுக்கும் படுகொலைகளை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை சர்வதேச சமூகம் அவதானிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது லெபனான் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்பது போர்நிறுத்த நிபந்தனைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அரக்சி வாதிடுகிறார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், "லெபனான் இந்தப் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல" என்று கூறியிருப்பது, அமெரிக்கா முன்கூட்டியே தனது உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்குவதைக் காட்டுவதாக ஈரான் தரப்பு குற்றம் சுமத்துகிறது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போர்நிறுத்தம் அமுலாகும் என முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் இந்தத் திடீர் அறிவிப்பு பேச்சுவார்த்தையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி உரிய பதிலடி கொடுக்கும் என ஈரான் தரப்பு எச்சரித்துள்ளது.
இதேவேளை, லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.