8 பெண்களை கழுத்தை நெரித்துக் கொன்ற தொடர் கொலையாளி
அமெரிக்காவில் நபர் ஒருவர் 30 ஆண்டுகளின் பின்னர் 8 பெண்களை கழுத்தைக் நெரித்துக் கொலை செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கில்கோ கடற்கரை (Gilgo Beach) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கில், 62 வயதான கட்டிடக் கலைஞர் ரெக்ஸ் ஹியூர்மன் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஹியூர்மன் மிகவும் நிதானமாகப் பேசினார்.

தான் பெண்களை எப்படிக் கொன்றார் என்பதையும், சிலரின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டியதையும் அவர் விவரித்தார்.
சில பாதிக்கப்பட்டவர்களின் தலை மற்றும் கால்களைக் கட்டி வைத்துச் சித்ரவதை செய்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், 1993 முதல் நீடித்து வந்த பல மர்மக் கொலைகளுக்கு விடை கிடைத்துள்ளது.
2010-ஆம் ஆண்டு ஷானன் கில்பர்ட் என்ற பெண் காணாமல் போனதைத் தேடியபோது, கில்கோ கடற்கரை ஓரம் வரிசையாக மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளிகளாகப் பணியாற்றிய இளம் பெண்கள்.
பல ஆண்டுகளாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை, இறுதியாக 2023-இல் டிஎன்ஏ (DNA) மற்றும் மொபைல் போன் பதிவுகள் மூலம் ஹியூர்மனைக் கைது செய்தது.
அவர் சாப்பிட்டுவிட்டுப் போட்ட பீட்சா துண்டிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்த முடி ஆகியவை ஹியூர்மனைச் சிக்க வைத்தன.
மௌரின் பிரைனார்ட்-பார்ன்ஸ், மெலிசா பார்தெலமி, மேகன் வாட்டர்மேன் உள்ளிட்ட எட்டு பெண்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 17-ஆம் திகதி அவருக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.