லிபரல் கட்சியில் இணைந்த 5ஆவது எதிர்க்கட்சி உறுப்பினர்
கனடாவின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான மர்லின் கிளாடு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகி, ஆளும் லிபரல் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
2015 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் 'சர்னியா—லேம்ப்டன்' தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த மர்லின் கிளாடு, இப்போது பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்.
கனடாவின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், சுதந்திரமான வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் பிரதமர் மார்க் கார்னியின் தலைமையே சிறந்தது எனத் தனது முடிவிற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்து விலகி லிபரல் கட்சியில் இணைந்த ஐந்தாவது உறுப்பினர் இவராவார்.
இவருக்கு முன்பாக மேலும் நான்கு கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் லிபரல் கட்சிக்குத் தாவியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மைக்குத் தேவையான 172 இடங்களை அடைய லிபரல் கட்சி போராடி வருகிறது. தற்போது மர்லின் கிளாடு இணைந்ததன் மூலம், லிபரல் கட்சியின் பலம் 171 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் ஒரே ஒரு ஆசனம் மட்டுமே தேவைப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு கோவிட்-19 தடுப்பூசி குறித்து மர்லின் கிளாடு பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
போலியோ நோயுடன் கோவிட் தொற்றை ஒப்பிட்டுப் பேசியதற்காக அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார்.
மர்லின் கிளாடு பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தொழில்பேட்டை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியின் உறுப்பினர் ஆளும் கட்சிக்கு மாறியிருப்பது, வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.