எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது அமெரிக்கா; ரஷ்யா குற்றசாட்டு!
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்காவின் செயல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 52-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நிலைகுலைந்துள்ளன.
இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி செய்து வருகின்றன.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் செயல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா அரசுக்கு ரஷ்ய அரசு தூதரகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன்(Joe Biden) தலைமையிலான அமெரிக்க அரசு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலில் ஈடுபடுகிறது.
உக்ரைனுக்கு மிகவும் அதிநவீன ஆயுதங்களை தொடர்ந்து வழங்கினால் கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.