உடைக்கப்பட்ட காந்தி சிலை; அமெரிக்க பொலிஸார் வழக்கு
கலிபோர்னியாவில் உள்ள மகாத்மா காந்தியின் உலோக சிலை மர்மநபர்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய பூங்கா டேவிஸ் நகரின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வர்.
இந்த பூங்காவில் மகாத்மா காந்தியின் நினைவாக இங்கு ஆறு அடி உயரம், 294 கிலோ எடை கொண்ட பிரான்ஸ் உலோக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் அடையாளமாக திகழும் காந்திசிலை மர்ம நபர்கள் சிலரால் சில இடங்களில் சேதமாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்ற கோணத்தில் கலிபோர்னியா மாகாண காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அவ்வப்போது அமெரிக்காவில் தலைவர்கள் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுவருகிறது. பூங்காவின் ஊழியர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு பொலிசாரிடம் தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து இந்த சிலை தற்காலிகமாக பூங்காவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் சேதமான இடங்களை மீண்டும் சரிசெய்து இந்த சிலை மீண்டும் பூங்காவில் நிறுவப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு கலிபோர்னியா மாகாண அரசுக்கு இந்த சிலையை பரிசு அளித்தது குறிப்பிடத்தக்கது.