பிரித்தானியாவிற்கு குடிபெயர ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்
அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தோர் இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களிலும் இதுவரை இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரையில் மட்டும் 6,618 அமெரிக்கர்கள், பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது, பதிவுகள் தொடங்கப்பட்ட 2004 இல் இருந்து அதிகளவிலான வருடாந்த எண்ணிக்கை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 03 மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டும் 1,900 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறப்பட்டதாக பிரித்தானிய அரசு தெரிவித்தது.
இதுவும், எந்தவொரு காலாண்டிலும் பெறாத அதிக எண்ணிக்கையேயாகும். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து,
பிரித்தானியா செல்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆலோசனைகளையும், இதுவரையில் இல்லாத அளவுக்கு, அதிகளவிலானோர் பெற்றுள்ளதாகக் குடிவரவு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் மனைவி, பெற்றோர், குடும்பத்தினரைக் காரணமாகக் கொண்டு பெரும்பாலானோர் குடியேற விரும்பியதாகவும், தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களுடன் பிரித்தானியாவில் குடியேற சிலர் விரும்பியதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இருப்பினும், ட்ரம்ப்பின் ஆட்சியால்தான் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு குடியேற முயல்வதாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.