ஜோ பைடன்- கமலா ஹாரிஸை கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை அமெரிக்கர்கள் கோலமிட்டு வரவேற்று வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இதனை வரவேற்கும் விதமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800க்கும் மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர். புதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டு, இதற்கு வாஷிங்டன் போலீசார் அனுமதியும் வழங்கினர்.
இருப்பினும், வாஷிங்டனில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக, பைடன் மற்றும் ஹாரிஸை அனைவருக்குமான ஜனாதிபதி என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், நேற்று முன்தினம் கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டது.
உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கோலங்கள் போடப்பட்ட ஓடுகளை காட்சிப்படுத்துவதற்கான இடமும், நாளும் தீர்மானிக்கப்படும் என்று ‘கோலம் 2021’ ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.