ஜார்ஜ் பிளாய்ட் கொலை; காணொளி பதிவு செய்த பெண்ணுக்கு உயரிய விருது
அமெரிக்க காவல்துறையால் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க 'புலிட்சர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் திகதி அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd), சாலையில் வைத்து டெரிக் சாவின் (Derek Chauvin) எனும் அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் (Tornella Frazier) என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததுடன் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) என்ற பெயரில், கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு (Tornella Frazier உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர்(Tornella Frazier ஊடக பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


