அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிப்பு!
காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில், பகிரங்கமாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்திடமிருந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை மலாவி பெற்றுக்கொண்டது. இதில் 80 சதவீதம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்ட நிலையில், தடுப்பூசிகளில் காலாவதி திகதி ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டிருந்த கிட்டதட்ட இருபதாயிரம் தடுப்பூசிகள் தற்போது தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான தடுப்பூசிகளை அழிக்க வேண்டாம் என்று முதலில் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது. எனினும் இப்போது அது தனது முந்தையை அறிவுரையை மாற்றிக்கொண்டு விட்டது என தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், இப்படி காலாவதியான கொரோனா தடுப்பூசிகளை பகிரங்கமாக தீயிட்டு எரித்த முதல் ஆபிரிக்க நாடு என்ற பெயரை மலாவி பெறுகிறது.
இது குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் சார்லஸ் மவன்சம்போ( Dr. Charles Mawansambo) கூறுகையில், ‘எங்களிடம் காலாவதியான தடுப்பூசிகள் இருப்பதாக தகவல்கள் பரவியபோது, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் யாரும் வரவில்லை என்பதை கவனித்தோம். நாங்கள் அவற்றை எரித்து அழிக்காவிட்டால், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்துகிறோம் என மக்கள் நினைப்பார்கள். அவர்கள் தடுப்பூசி போடவரவில்லை என்றால் கொரோனா வைரஸ் தாக்கும் என கூறினார்.
இதேவேளை 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மலாவியில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் 34,251பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,153பேர் உயிரிழந்துள்ளனர்.