ஆங் சான் சூகி நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தகவல்
மியான்மாரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த ஆங் சான் சூகி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அந் நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சுமத்தியதுடன் , தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. .
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
அத்துடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது.