பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பார்வை பறிபோகும் அபாயம்; அவுஸ்திரேலிய பெண் அரசியல்வாதி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான அமைதியான ஆர்ப்பாட்டத்தின் பொலிஸாரினால் தாக்கப்பட்டதன் காரணமாக தனது ஒருகண் பார்வையை இழக்கும் நிலையில் உள்ளதாக அவுஸ்திரேலிய பெண் அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது பிரதமர் அன்டனி அல்பெனிசிற்கு எதிராக போட்டியிட்ட பெண் அரசியல்வாதி ஹனாதோமஸ், தற்போது சத்திரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
காசாவில் மக்கள் அனுபவிப்பதுடன் ஒப்பிடும்போது நான் ஒன்றும் இல்லை
அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான போராட்ட எதிர்ப்பு சட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை பூதாகரமாக சித்தரிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டங்கள் பொலிஸாருக்கு கடும் வன்முறையை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான துணிச்சலை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காரணமாக காசாவில் பொதுமக்கள் அனுபவிப்பதுடன் ஒப்பிடும்போது நான் அனுபவிப்பது ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் , காசாவில் காயங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அவயங்கை மயக்கமருந்து இல்லாமல் துண்டிக்கும் நிலை காணப்படுகின்றதாகவும் வேதனை வெளியிட்டார்.