எமிரேட்ஸ் விமானத்தில் ஈரானியர்கள் பயணிக்க தடை
டுபாய் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கோ அல்லது அதன் ஊடாகப் பயணம் செய்வதற்கோ தற்போது அனுமதி இல்லை எனத் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பயணக் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் பயணக் கட்டுப்பாடுகள்
புதிய கட்டுப்பாடுகளின்படி, ஈரானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதற்கும், எமிரேட்ஸ் வானூர்திகளின் போக்குவரத்து மையமாக (Hub) அதனைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றொரு வானூர்தி நிறுவனமான ஃபிளைடுபாய் (Flydubai), இதில் விதிவிலக்குகள் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய கோல்டன் விசா வைத்துள்ள ஈரானியப் பிரஜைகள் தொடர்ந்து நாட்டிற்குள் நுழைய அல்லது அதன் ஊடாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.