உயிர் தப்பியதை நம்ப முடியவில்லை: மண்சரிவில் சிக்கிய கனேடிய பெண்ணின் பகீர் அனுபவம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் புயலுக்கு பின்னர் வெளுத்துவாங்கிய பேய் மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பிரதான சாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளது.
பெருவெள்ளம், மண்சரிவால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஒருவர் மண்சரிவில் இருந்து உயிர் தப்பிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சர்ரே பகுதியில் யோகா பயிற்றுவிப்பாளராக இருந்து வருகிறார் Chelsey Hughes. இவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்சரிவில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்.
ஹியூஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒகேனக்கனில் உள்ள ஒரு நண்பரின் இல்லத்திலிருந்து சர்ரே பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
பேய் மழை கொட்டித்தீர்த்தபடி இருந்தது எனக் கூறும் ஹியூஸ், சாலை மூடப்பட்டிருந்த காரணத்தால் ஹோப் மற்றும் அகாசிஸுக்கு இடையேயான பிரதான சாலை 7 வழியாக அவர் செல்ல நேர்ந்தது.
இந்த நிலையிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் மண்சரிவில் அவரது வாகனம் சிக்கியுள்ளது. அதிர்ச்சியிலும் நிதானம் கைவிடாத அவர், உடனையே 911 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
அப்போது தான் தாம் குளிர் நீரில் மூழ்கியிருப்பதும், கார் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதையும் உணர்ந்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், காரில் இருந்த இன்னொரு மொபைல் மூலம் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இரவு 8 மணிக்கு மீட்புக்குழுவினருடன் தொடர்பு கொண்ட அவர், இரவு 10 மணிக்கு தாம் மீட்கப்படுவோம் என நம்பியிருந்தார். ஆனால் மீட்புக்குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து சேர 12.45 மணியாகியுள்ளது.
பின்னர் ஹியூஸ் உட்பட அந்த பிரதான சாலையில் சிக்கியிருந்த இன்னும் சிலரையும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
அதுவரை, அந்த மழையில், நடுங்கும் குளிரில் முழங்கால் அளவு தண்ணீரில் தவித்த அந்த நிமிடங்கள் மறக்கவே முடியாது என்கிறார் ஹியூஸ்.