நெதர்லாந்தில் ஆளும் கட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு
நெதர்லாந்து பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (7)இரவு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தலைநகர் 'தி ஹேக்' மையப்பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இரவு 09 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பட்டாசுகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு
தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் குறித்து நெதர்லாந்து பிரதமரும் D66 கட்சியின் தலைவருமான ராப் ஜெட்டன் கருத்துத் தெரிவிக்கையில், "பட்டாசுகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று அலுவலகத்தின் கதவில் இருந்த தபால் பெட்டி வழியாக உள்ளே வீசப்பட்டுள்ளது.
இது ஒரு கோழைத்தனமான அச்சுறுத்தல் செயலாகும்," எனக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட மத்தியவாத கட்சியான D66, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான கீர்ட் வில்டர்ஸின் சுதந்திரக் கட்சியைத் தோற்கடித்து வியத்தகு வெற்றியைப் பெற்றது. இதற்கு முன்னரும், குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது இக்கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டிருந்தது.
வலதுசாரி ஆதரவாளர்களால் 'மேல்தட்டு முற்போக்காளர்களின் கட்சி' என விமர்சிக்கப்படும் D66 கட்சி மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.