மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கிருமிகள் இருப்பது குறித்து சரிவர அறிவிக்காத கனேடிய நகரம்: கோபத்தில் மக்கள்
மொன்றியல் நகரின் சில பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கிருமிகள் இருப்பது தெரியவந்த நிலையில், அது குறித்து தங்களுக்கு சரிவர அறிவிக்கப்படாததால் மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
மொன்றியல் நகரின் Dollard-des-Ormeaux (DDO) மற்றும் Pierrefonds ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரில் கிருமிகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரிவந்துள்ளதால், குடிப்பது, சமைப்பது, ஐஸ் தயாரிப்பது, செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மற்றும் பல் துலக்குவது ஆகிய விடயங்களுக்கு கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.
தன்ணீரை குறைந்தது ஒரு நிமிடத்துக்காவது கொதிக்கவைத்து பிறகு பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தார்கள்.
மற்றபடி குளிக்க, துணி துவைக்க இந்த தண்ணீரை அப்படியே பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான் என்று கூறிய அவர்கள், குழந்தைகளை குளிக்கவைக்கும்போது மட்டும் அவர்கள் தண்ணீரை குடித்துவிடாமல் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், இந்த அறிவிப்பு சரியாக மக்களைச் சென்றடையவில்லை என கூறப்படுகிறது.
Melanie Ryan Graif என்ற பெண் கூறும்போது, சமூக ஊடகம் ஒன்றில் உலாவிக்கொண்டிருக்கும்போது, தான் தற்செயலாக இந்த எச்சரிக்கையை கவனித்ததாக தெரிவிக்கிறார். தனக்கு இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறும் அவர், அதை கவனிக்காமல் இருந்திருந்தால், வழக்கம்போல அதே தண்ணீரில் பல் துலக்கிவிட்டு தூங்கச் சென்றிருப்போம் என்கிறார்.