உடலை காந்தமாக மாற்ற சிறுவன் செய்த செயல்; அதிர்ந்த மருத்துவர்கள்
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர், பிரஸ்ட்விச் பகுதியை சேர்ந்த 12 வயது ரிலே மோரிசன் என்ற மாணவன் தனது உடலை காந்தமாக மாற்றும் பொருட்டு, 54 காந்த கோலிகளை முழுங்கியுள்ளான்.
ஜனவரி முதலாம் திகதி சில காந்த கோலிகளை முழுங்கிய சிறுவன் ரிலே மோரிசன், தமது சோதனை முயற்சி வெற்றி பெறாததை அடுத்து, ஜனவரி 4ஆம் திகதி இன்னொரு பகுதி காந்த கோலிகளை முழுங்கியுள்ளான்.
மட்டுமின்றி, அந்த கோலிகள் தமது ஆசன வாய் வழியே வெளியேறும் என்றும் நம்பியுள்ளான். ஆனால், மாணவன் ரிலே மோரிசன் திட்டமிட்டபடி எதுவும் நடக்காத நிலையில், பயந்து போன சிறுவன், நள்ளிரவு 2 மணிக்கு தனது தாயாரை தூக்கத்தில் இருந்து எழுப்பி, தவறுதலாக இரு காந்த கோலிகளை முழுங்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த தாயும் மகனும், அங்கே எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் வயிற்றில் இரண்டல்ல, ஒரு குவியலாக காந்த கோலிகள் கிடப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
மேலும், அந்த காந்த கோலிகளால் சிறுவனின் உள் உறுப்புகள் சேதமடைந்து, உயிருக்கே அது உலைவைக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்க,உடனடியாக அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு, நீண்ட 6 மணி நேரம் போராடி மருத்துவர்கள் அந்த கோலிகள் அனைத்தையும் வெளியே எடுத்துள்ளனர்.
இதன்போது சுமார் 10 நாட்கள், நகர முடியாமல், பச்சை நிறத்தில் தொடர்ந்து வாந்தி எடுத்து, குழாய் மூலம் உணவளிக்கப்பட்டு, சிறுவன் ரிலே பெரும் பாடு பட்டுள்ளான்.
இரண்டு வாரங்களுக்கும் அதிகமான நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ள சிறுவன் ரிலே,அந்த காந்த கோலிகள் கழிவுகளுடன் வெளியேறிவிடும் என்றே நம்பி, மொத்தம் 54 கோலிகளை முழுங்கியுள்ளான்.
இந்நிலையில் மருத்துவமனையில் தமது மகன் பட்ட அவஸ்தை நெஞ்சை உலுக்குவதாக இருந்தது எனக் கூறும் தாயார் பைஜ் வார்டு,கொரோனாவால், வேறு யாரும் சிறுவனை சந்திக்கவோ, கவனித்துக் கொள்ளவோ முடியாத சூழல் இருந்தது என்றார்.
மேலும் மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய சிறுவன் ரிலே, முதல் வேலையாக தம்மிடம் இருந்த காந்தத்தாலான விளையாட்டு பொம்மைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.