832 பிஞ்சு குழந்தைகள் பலி; கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில்
கொடிய கொரோனா முதியவர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் கொன்று எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலான நாடுகளில் தற்போது 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும் ஆபத்தானது என்றும் கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்து விடுத்திருந்தனர். ஆனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் அதனை காதில் வாங்கி சுதாரிக்க தவறிவிட்டன. இதன் காரணமாக தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் வயதான பெரியவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதுடன் இவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால், அதிக ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான், தடுப்பூசி போடுவது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் முதியவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அதேசமயம், இந்த தொற்று வயதானவர்களைதான் தாக்குகிறது, இளைஞர்களுக்கு அவ்வளவாக ஆபத்து இல்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளது. எனினும் , இளைஞர்களையும் கொரோனா விட்டு வைக்காமல், குழந்தைகளையும் சேர்த்தே தாக்கி வருகிறது.
இந்த தாக்கம் பிரேசிலில் அதிகமாக இருக்கிறது. அதன்படி கொரோனாவால் குழந்தைகள் இறப்பது அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்களே தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி, தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடு பிரேசில்தான்.. பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பையுமே இந்த தொற்று தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதல் இப்போதுவரை 832 குழந்தைகள் தொற்றினால் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதிலும் கொடுமை என்னவென்றால், இவர்கள் எல்லாருமே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்கின்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.