பிரித்தானியாவில் 3000 பேருக்கு புதிய வகை கொரோனா! வெளியான அதிர்சசி தகவல்
இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617- என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. பிரித்தானியாவிலும் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் மீண்டும் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால், ஜூன் மாதம் முதல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வர திட்டமிட்ட இங்கிலாந்தில், அதில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரித்தானியாவில் சுமார் 3 ஆயிரம் பேர் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
இதனால், கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரித்துள்ள இங்கிலாந்து, தடுப்பூசி திட்டத்தையும் இன்னும் வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,696- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,52,527-ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,27,694- ஆக இருக்கிறது.