இந்தியா பாகிஸ்தான் விமானங்கள் மீதான தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கனடா வரும் பயணிகள் விமானங்கள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 22 அன்று இந்தியா பாகிஸ்தான் விமானங்களுக்கு கனடா விதித்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், அந்த தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கனடா வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயண பாதுகாப்பும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம் என்று கூறியுள்ள கனடா போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra, கொரோனா வைரஸ் மற்றும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு வரும் நேரடி விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்தியா பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு, மூன்றாம் நாடு ஒன்றிற்குச் சென்று, அங்கிருந்து கொரோனா சோதனை மேற்கொண்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்துடன் கனடா வருவதற்கு தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்பூசி, பாதுகாப்பு உபகரணங்கள் முதலான அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வர உதவும் என்பதால், சரக்கு விமானங்களுக்கும் தடையில்லை என்றும் கனடா அறிவித்துள்ளது.