நான்காவது அலைக்குள் நுழைந்தது கனடா: மருத்துவர்கள் எச்சரிக்கை
சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கனடா நான்காவது அலைக்குள் நுழைந்து விட்டதாக முதன்மை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் ஒருவாரகால சராசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது 1,300 என பதிவாகியுள்ள நிலையில், இது கடந்த வாரத்தை விடவும் 60 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளது.
மேலும், புதிய பாதிப்புகளின் பெரும்பகுதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகியுள்ளது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடையில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவை அடுத்து ஆல்பர்டா, சஸ்காட்செவான், ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் அதிக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரொறன்ரோவில் St. Michael மருத்துவமனையில் பணியாற்றும் முதன்மை மருத்துவர் Fahad Razak, கனடா நான்காவது அலைக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா மாறுபாடின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவராததாலையே, தற்போது நாம் நான்காவது அலைக்குள் நுழைந்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.