காலி-ஸ்தான் அமைப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட தகவல்
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், வன்முறை தீவிரவாத திட்டங்களை ஊக்குவிப்பதாகவும் கனடா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக் கோரி காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இயங்கி வந்தது.

கடந்த 1980ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, 1990களில் இந்தியாவில் ஒடுக்கப்பட்டது. இருப்பினும், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் சில புலம்பெயர்ந்த சீக்கிய குழுக்களிடையே இந்த இயக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. குறிப்பாக, கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் வாழ்கின்றனர்.
அங்குள்ள சில குழுக்கள் காலிஸ்தான் ஆதரவு பிரசாரங்களையும், பொது வாக்கெடுப்புகளையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கனடா பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு 2025ம் ஆண்டுக்கான பொது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு குழுக்களில் சில, கனடா மண்ணை பயன்படுத்தி வன்முறை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக அவை செயல்படுகின்றன. சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் நிதி, வன்முறை செயல்களுக்கு திருப்பி விடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
சில பயங்கரவாதிகள் கனடாவின் அரசு மற்றும் சமூக நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துகொண்டு, அவற்றை தங்கள் நலனுக்காகவும், ஆள் சேர்ப்புக்காகவும் பயன்படுத்துகின்றனர் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.