கனடாவில் தபால் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் (FIFA World Cup 2026) ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கான தபால் விநியோகத்தில் தற்காலிகத் தாமதங்கள் ஏற்படலாம் என கனடா தபால் திணைக்களம் எச்சரித்துள்ளது.
டொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களில் வார நாட்களில் போட்டிகள் நடைபெறும் போது இந்தச் சேவைத் தடங்கல்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை டொராண்டோவில் நடைபெறும் 'ஃபிஃபா ஃபேன் ஃபெஸ்டிவல்' கொண்டாட்டங்கள் மற்றும் 6 போட்டி நாட்களின் போது, போட்டிகள் நடைபெறும் மைதானங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான தபால் சேவைத் தடங்கல்கள் ஏற்படும் என கனடா தபால் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போட்டிகள் நடைபெறும் 5 வார நாட்களிலும் தபால்களை உரிய முறையில் விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அது குறிப்பிட்டுள்ளது.
டொராண்டோவில், போட்டிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதி மூடல்களால் சில பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் விநியோகிக்க முடியாத தபால்கள் அனைத்தும் கனடா தபால் திணைக்கள பணிமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அடுத்த வேலை நாளில் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.